Translate

Monday 6 June 2016

நோன்பு - கவிக்கோ அப்துல் ரஹ்மான்




அருளின் தேவதை
ஆண்டுக்கொரு முறை
கால வீதியில் காலெடுத்து
வைக்கின்றாள் -சாந்தியின் தூதாக !

அவள்தான் ரமழான் !

அவள் புன்னகையில்
ஆயிரம் பூர்ணிமைகள் ! கண்களிலே
கருணைச் சுடர்கள் !

அவள்
நான்கு வேதங்களை
ஈன்றளித்த புனிதத் தாய் !

பாவக் கறைகளை
அவள் பரிவோடு
துடைக்கின்றாள் !

நரகக் கூண்டுகளில்
அடைபட்ட பறவைகளை
விடுதலை செய்கின்றாள் !
பிறைச் சுடர் கொண்டு
அக அகல்களில் எல்லாம்
ஆன்மீக வெளிச்சம்
ஏற்றி வைக்கின்றாள் !

பசியென்ற அமுதம்
பரிமாறிப் பூமியையே
சொர்க்கமாய் ஆக்குகிறாள் !

பணத்தைப்
பகிர்ந்து கொள்ள
ஏழை வரி !
பசியைப் பகிர்ந்து கொள்ள
உண்ணா நோன்பு !
எதுவுமே தேவையற்ற
இறைவன்
நோன்பை மட்டும்
தனக்கென்று கேட்கின்றான் !
தருவதற்கு கொடுத்து
வைக்க வேண்டாமா ?


அடடா !
எத்தகைய பெருமை !
இறைவனே நம்முன்
இரக்கின்ற ஏழை !

கொடை வள்ளல் நாமெல்லாம் !
வேலைக்கே கூலியுண்டு !
ஓய்வுக்கு யார் தருவார் ?
ஆனால்-வயிற்றின்
இந்த ஓய்வுக்கு
வல்லோன் இறைவன்
தன்னையே சம்பளமாய்த்
தந்து விடுகின்றான் !

உபவாசம் இருப்போரின்
வாய் வாசம் இறைவனுக்கு
கஸ்தூரி வாசம் !
இதுதான் அவன்
ஆலயத்தின்
நறுமணத் தூபம் !

இல்லாமல் பசிக்கின்ற
ஏழையரின் துயருணர
இருப்பவனைப்
பசிக்க வைக்கும் இணையற்ற
தத்துவமே நோன்பு !அங்க ரதத்தை
அங்கிங்கே அலை கழிக்கும்
ஐந்து குதிரைகளை
அடக்கும் கடிவாளமிது !

மனிதன்ஆசைகளின்
எடுபிடியாய் ஆடாமல்
அவைகளைத் தன்  
எவலராய் மாற்றும்
அதிகார வலிமையிது !

உதிர வீதிகளில்
உலா வரும் சாத்தானும்
சிந்தை நடுங்கும்
சிகப்பு விளக்கு இது !

சொர்க்க வாசல்களைத்
திறக்கின்ற சாவியிது !

நரக வாசல்களையோ
அடைத்து விடும் பூட்டும் இது !

ஆன்மாவுக்கு
இது கூட்டுப் புழு பருவம் !

ஞான மலர் தேடி
தேனெடுக்க உதவுகின்ற
வண்ணச் சிறகுகள்
வளர்வது இதிலே தான் !

பருகாமல் உண்ணாமல்
பட்டினி கிடந்து விட்டால்
நோன்பாகி விடாது !

ஐம்பொறியும் உறுதியுடன்
அனுஷ்டிக்கும் விரதமிது !

புறம்பேசல் என்னும்
இறந்த சகோதரனின்
இறைச்சி உண்ணும்
அநாகரீகம் நடத்தாமல்
இருப்பதே நாவின் நோன்பு !

அழுகிய வார்த்தைகளை
அருந்தாமல் இருப்பதே
செவியின் நோன்பு !

ஆபாசம் கண்டால்
அருவெருப்பதே
கண்ணின் நோன்பு !

ஆசைகள் பரிமாறும்
அறுசுவை விருந்தை
மறுப்பதே மனத்தின் நோன்பு !

இந்த உலகத்தின்
இன்பங்கள் என்ன அந்தக்
கதிர் நிலவைக்
கொண்டு வந்து
கைகளிலே கொடுத்தாலும்
சொர்க்கத்தின் எல்லா சுகங்களையும்
கொண்டு வந்து காலடியில்
வைத்தாலும்  இறைவா !
உன்அன்பின் முன்
இவையெல்லாம்  தூசு என்று
எட்டி உதைக்கின்ற
ஏற்றத்தைப் பெற்று விட்டால்
அது தான்ஆன்மாவின் நோன்பு !

இந்தப் பக்குவம் எய்தி விட்டால்
பின்  உறக்கமும்
வணக்கமாகி விடும் !

சுவாசமே தஸ்பீஹு
ஆகி விடும் !

பிரார்த்தனை
பிறகு தேவை இல்லை -தனியாக !
ஏனென்றால்-நாமே
பிரார்த்திக்கப்படும்
பொருளாய் ஆகிவிடுகிறோம் !


[][][]

No comments:

Post a Comment